நாகர்கோவில்: தமிழ்நாட்டில் முதல்முறையாக ‘மக்களைத்தேடி ஆய்வக சேவை’ என்ற திட்டத்தின் துவக்க விழா நாகர்கோவில் மாநகராட்சி தொல்லவிளையில் உள்ள அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ‘மக்களைத்தேடி ஆய்வக சேவை’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழ்நாட்டில் 2686 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் 29 வகையான ஆய்வக வசதிகள் இருக்கிறது.
இந்த ஆய்வுகளை மேற்கொள்ள அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு வர வேண்டிய சூழல் இருக்கும். இத்திட்டம் மூலம் எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலுமே 63 வகையான மாதிரிகளுக்கு ஆய்வு பரிசோதனைகளை செய்து அதற்கான முடிவுகளை பெறலாம். இது தமிழ்நாட்டில் முதல் முறையாக செய்யப்பட்டிருக்கும் ஒரு மகத்தான வசதி. இத்தகைய ஒரு மகத்தான திட்டம் தான் மக்களை தேடி ஆய்வக சேவை திட்டம் என்கின்ற ஒரு திட்டம். இவ்வாறு அவர் பேசினார்.