சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, மாணவ, மாணவிகள் மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (04.04.2023) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 27.94 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சுகாதார மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை திறந்து வைத்து, 5 கோடியே 47 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அனிதா அச்சிவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ, மாணவியர்கள் மற்றும் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திரு.வி.க. நகர், பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் 20.99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், திரு.வி.க. நகர் 8-வது தெருவில் அமைந்துள்ள காலி மைதானத்தில் 46.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சிறுவர் பூங்கா, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஜி.கே.எம். காலனி 34-வது தெரு, பள்ளி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, பல்லவன் சாலை மற்றும் ஜெகநாதன் சாலை ஆகிய இடங்களில் 1 கோடியே 91 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 பல்நோக்கு மையங்கள் (ரேஷன் கடைகள்) ஆகிய பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
மேலும், பல்லவன் சாலையில் 1100 மீட்டர் நீளத்திற்கு 15.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் அகரத்தில் 27.94 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சுகாதார மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை திறந்து வைத்தார். மேலும், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஜெகநாதன் தெருவில் 48.35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பல்நோக்கு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், ஜவஹர் நகர் 2-வது பிரதான சாலையில் உள்ள நட்சத்திர விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்து மையம் மற்றும் ஜவஹர் நகர் 1-வது வட்ட சாலையில் உள்ள பூப்பந்து உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ஜவஹர் நகரில் 30.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேஜை பந்தாட்டத்திற்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ஜவஹர் நகர் 2-வது பிரதான சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து திருமலை நகர் 1வது தெரு பூங்கா, முகமது உசேன் காலனி பூங்கா, செந்தில் நகர் 13வது தெரு மற்றும் சீனிவாசா நகர் 3வது பிரதான சாலையில் அமைந்துள்ள நகர்ப்புற சுகாதார மையம் ஆகியவற்றை 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி; சக்திவேல் நகர் 2வது குறுக்கு தெருவில் அமைந்துள்ள பூங்காவில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள நடைபாதை, திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் கழிப்பறை வசதி; 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திரு.வி.க நகர் 18வது தெருவில் அமைந்துள்ள குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் வெளிப்புற சுற்றுச்சுவர் மற்றும் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தீட்டித் தோட்டம், குறுக்கு தெருக்களில் பேவர் கற்களைக் கொண்டு புதிய சாலை அமைக்கும் பணி; ஜவஹர் நகர் 5வது பிரதான சாலை பூங்கா, பெரியார் நகர் 20வது தெரு பூங்கா மற்றும் ராம் நகர் 2வது பிரதான சாலை விளையாட்டுத்திடல் ஆகியவற்றில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள்; 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோபால் காலனியில் அமைந்துள்ள விளையாட்டுத்திடலில் புதிதாக திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணி, ஜி.கே.எம் காலனி 15வது தெருவில் பேவர் கற்களைக் கொண்டு புதிய சாலை அமைக்கும் பணி மற்றும் லோகோ ஒர்க்ஸ் சாலையில் அமைந்துள்ள சிறுவர் விளையாட்டுத்திடலில் புதிதாக சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் வாங்கி அமைக்கும் பணிகள்; கபிலர் தெரு, திக்காகுளம் தெரு, வசந்தா தோட்டம் மதுரை தெரு ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்களில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி மற்றும் திக்காகுளம் பகுதியில் வெளிப்புற சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, என மொத்தம் 2.10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, பெரியார் நகரில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் மைதானத்தில் அனிதா அச்சிவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ, மாணவியர்கள் மற்றும் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள், மடிக்கணினிகள், தையல் இயந்திரங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, துணை மேயர் மு. மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.