செங்கல்பட்டு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகப்பன் (எ) சசிகுமார் (37), கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2017ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், மகளிர் போலீசார் வழக்கு பதிந்து நாகப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாகப்பனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனைத்தொடர்ந்து, குற்றவாளி நாகப்பனை புழல் சிறையில் அடைத்தனர்.