Wednesday, May 22, 2024
Home » பதவிவெறியில் பிரிவினை பேச்சில் ஈடுபட்டிருக்கிறார் பிரதமர் மோடி வாக்குக்காக இப்படி மலிவான அரசியல் செய்பவரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பதவிவெறியில் பிரிவினை பேச்சில் ஈடுபட்டிருக்கிறார் பிரதமர் மோடி வாக்குக்காக இப்படி மலிவான அரசியல் செய்பவரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

by MuthuKumar

சென்னை: பதவி வெறியில், பிரிவினைப் பேச்சில் ஈடுபட்டிருக்கிறார் பிரதமர் மோடி. வாக்குக்காக இப்படி மலிவான அரசியல் செய்பவரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், மஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆகியேரை அறிமுகப்படுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இந்த தேர்தலில் நீங்கள் போடும் வாக்குதான் இந்தியாவில் இனி ஜனநாயகம் இருக்கவேண்டுமா அல்லது சர்வாதிகாரம் இருக்கவேண்டுமா என்பதை முடிவு செய்யும். தெற்கிலிருந்த நம்முடைய குரல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக எதிரொலித்திருக்கிறது. திமுக – காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கைகள் இந்தத் தேர்தலின் “ஹீரோ”என்றால், பா.ஜ. வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் வில்லன். மத அடிப்படையில் இந்த நாட்டு மக்களை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கிறார்கள். ஏமாற்றும் தேர்தல் அறிக்கையாகவும் பா.ஜ. தேர்தல் அறிக்கை இருக்கிறது. ‘ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்கப்போகிறோம்’ என்று 2019 தேர்தல் அறிக்கையில் கூறியதை, மறுபடியும் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்கள். ஆனால், உண்மையில், நாப்கினுக்கு ஜி.எஸ்.டி போட்டது தான் பா.ஜ. ஆட்சி.

வாயைத் திறந்தாலே சாதி மதம் என்று மக்களைப் பிளவுபடுத்தித்தான் பேசுகிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல், முஸ்லீம் லீக்கின் அறிக்கை என்று விமர்சித்து, பிரிவினைவாதம் பேசினார். இப்போது, இன்னும் கீழே இறங்கிச் சென்று, மற்றவர்கள் உண்ணும் உணவை விமர்சிக்கிறார், பதவியில் தொடர முடியாது என்ற வெறியில், பிரிவினைப் பேச்சில் ஈடுபட்டிருக்கிறார். உணவு என்பது தனிநபர்களின் விருப்பம், அடுத்த மனிதர் என்ன சாப்பிடவேண்டும் என்று முடிவு செய்ய மோடிக்கு மட்டுமல்ல, யாருக்குமே உரிமையில்லை. இப்படியெல்லாம், ஒரு பிரதமர் பேசுவாரா? வாக்குக்காக இப்படி மலிவான அரசியல் செய்யும் மனிதரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை.
கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டிற்குப் பத்து லட்சம் கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக பச்சைப் பொய் சொல்கிறார்கள், நம்மிடம் ஒரு ரூபாயை வரியாக வாங்கினால், 29 பைசா மட்டும் திருப்பித் தந்துவிட்டு, நேற்று ஒரு கணக்கு காட்டியிருக்கிறார்கள், எல்லாம் பொய்க் கணக்கு.

இங்கே மீனவர்கள் பலர் வந்திருக்கிறீர்கள், சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி ரூபாய் கொடுத்திருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பணிகள் எங்கேயாவது நடந்து பார்த்திருக்கிறீர்களா? அதுமட்டுமல்ல, ஒற்றைச் செங்கல்லோடு நிற்கும் எய்ம்ஸ்க்கு 1,960 கோடியாம், அதற்குத்தான் கேட்டேன். நீங்கள் பேசும் எத்தனை பொய்களைத்தான் எங்கள் காதுகள் தாங்கும்? எங்கள் காது பாவமில்லையா?

இங்கே பழனிசாமி முதலமைச்சராக இருந்து தமிழ்நாட்டினுடைய எல்லா உரிமைகளையும் மொத்தமாக பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்டார். சிறுபான்மையினருக்கு எதிரான சிஏஏ சட்டத்தை ஆதரித்து ஓட்டுபோட்டது அ.தி.மு.க. மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து உழவர்களுக்கு துரோகம் செய்த புண்ணியவான்தான் பழனிசாமி. இவரின் வேடமெல்லாம் மக்களிடம் எப்போதும் எடுபடப் போவது இல்லை. இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க இந்தியா முழுவதும் எல்லா மாநில மக்களும் தயாராகிவிட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் நான் தேர்தல் சுற்றுப்பயணம் போய்விட்டு சென்னை வந்திருக்கிறேன்.

ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்கள், இளைஞர்கள், குறிப்பாக, பெண்கள் தருகிற ஆதரவு பிரமிக்க வைக்கிறது. சென்னையும் திருவள்ளூரையும் 10 ஆண்டு ஆட்சியில் பா.ஜ.வும் அ.தி.மு.க.வும் முழுமையாகப் புறக்கணித்தார்கள். அதனால்தான் 2019 தேர்தலிலும், 2021 தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் நீங்கள் அவர்கள் இண்டு பேரையும் மொத்தமாக ஒதுக்கி, தி.மு.க. கூட்டணிக்கு முழுவெற்றியை தந்தீர்கள். அது இந்தத் தேர்தலிலும் தொடர வேண்டும்.

சென்னையும், திருவள்ளூரும் வளரக்காரணம் தி.மு.க. ஆட்சி இந்தப் பகுதியை எப்போதும் கண்டுகொள்ளாத ஆட்சி அ.தி.மு.க. பா.ஜ.க. ஆட்சி. இதனை மனதில் வைத்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றிபெற வைக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாவட்ட செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர், ஆர்.டி.சேகர், டி.ஜே.கோவிந்தராஜன், திருத்தணி சந்திரன், திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கிரிராஜன் எம்பி, மேயர் பிரியா, ஆவடி மேயர் உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.சங்கர், கிருஷ்ணசாமி, ஐட்ரீம் மூர்த்தி, ெஜ.ெஜ.எபினேசர், துரை சந்திரசேகர், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி உள்பட மாவட்ட, பகுதி, வட்ட, ஒன்றிய, பேரூர், நகர நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

four × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi