சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பொழிவினால் ஏற்பட்ட சேதத்தை நிரந்தர மறு சீரமைப்பு செய்ய ரூ.37,906 கோடி நிதி தேவைப்படுகிறது. எனவே தேசிய பேரிடர் நிதியில் இருந்து ஒன்றிய அரசு உடனே நிதி வழங்க வேண்டும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் வரலாறு காணாத எதிர்பாரா மழைப்பொழிவினால் மாநிலத்தின் பொது சொத்துக்கள் மற்றும் கட்டமைப்புகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தற்காலிக மற்றும் நிரந்தர மறு சீரமைப்பு பணிகளுக்காக தென் மாவட்டங்களுக்கு ரூ.18,214 கோடியும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ரூ.19,692 கோடி நிதி தேவைப்படுகிறது. இப்பேரழிவின் பாதிப்புகள் குறித்து ஒன்றிய அரசிடம் வழங்கப்பட்ட இரண்டு விரிவான அறிக்கைகளின் அடிப்படையிலும் ஒன்றிய அரசு அலுவலர் குழுவின் நேரடி ஆய்வின் அடிப்படையிலும் தேசிய பேரிடா நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ஒன்றிய அரசு நிதி வழங்கும் என்று நம்புகிறோம்.