Sunday, September 1, 2024
Home » மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் இன மக்கள் குவிந்தனர் மாசிமக தீர்த்தவாரி கோலாகல கொண்டாட்டம்: பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்

மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் இன மக்கள் குவிந்தனர் மாசிமக தீர்த்தவாரி கோலாகல கொண்டாட்டம்: பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்

by Ranjith

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் மாசிமக தீர்த்தவாரி இருளர் இன மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. உலக புகழ்பெற்ற கடற்கரை நகரமான கடல் மல்லை என்னும் மாமல்லபுரத்தில் மாசிமக தீர்த்தவாரி இருளர் இன மக்களால் வெகு விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. தங்கள் குலதெய்வமான கண்ணியம்மனை வழிபடுவதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான இருளர் இன மக்கள் மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்று கூடி மாசிமக திருவிழாவை சிறப்பாக கொண்டாடினர்.

முன்னதாக, 3 ஆண்டுகளுக்கு பிறகு மாசிமக திருவிழாவை முன்னிட்டு மாமல்லபுரம் ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் திருக்குளத்தில் நேற்று முன்தினம் இரவு உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் சுற்றி வந்து மக்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் திரண்டு கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளின் திருவருளை பெற்றனர்.  இதனையடுத்து நேற்று காலை ஸ்ரீ தலசயன பெருமாள், ஆதிவராக பெருமாளுடன் கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர், சங்கரத்தாழ்வாரை கடலில் புனித நீராட்டினர்.

இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் கடலில் நீராடி மகிழ்ந்தனர். மாமல்லபுரத்தில் மாசிமகம் காலம் காலமாக மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து இருளர் மக்களும் தீர்த்தவாரிக்கு 2 நாட்களுக்கு முன்பே மாமல்லபுரம் வந்து தற்காலிக குடில்கள் அமைத்து விழாவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்தனர். மாசி மக பவுர்ணமியை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் என நேற்று முன்தினம் இரவு முழுவதும் பவுர்ணமி வெளிச்சத்தில் ஆடிப் பாடி மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று அதிகாலையில் கடலில் குளித்து மணலில் செய்த கண்ணியம்மன், கடல் கன்னி, சப்த கன்னிகளை வழிபட்டனர். மாசிமகமான நேற்று மகிழ்ச்சியான சுபநிகழ்ச்சிகள் செய்வது குறித்து கண்ணியம்மனிடம் குறி கேட்டு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் மற்றும் காது குத்தல், மொட்டை அடித்தல் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை செய்து மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக, 15க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆறு குளங்களில் நீராடுவது என்பது வேறு, பவுர்ணமி நாளில் கடலில் நீராடுவது என்பது வேறு.

மாசிமகப் திருவிழா அன்று கடலில் நீராடுவதால் 21 தலைமுறை பாவங்களும் நீங்கும். இவற்றின் மூலம் நவகிரக தோஷம் நீங்கி, புண்ணியம், மோட்சம், அர்த்து சேது எனும் புண்ணிய பலன் மற்றும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பவுர்ணமி நாளில் கடலில் நீராடுவதால் வருடத்தின் 365 நாட்களும் நீராடிய காசி, ராமேஸ்வரம் சென்று வந்த பலன் கிடைக்கும். பெருமாளே கடலில் இறங்கி நீராடும் மாசிமக நன்னாளில் பெருமாள் குளித்த கடலில் நீராடினால் பெறும்பேறு உண்டாகும் என்று பக்தர்கள் மனமுருக மாசிமக நன்னாளில் கடலில் நீராடி செல்கின்ற காட்சி இன்றளவும் காணக் கிடைக்காத காட்சி ஆகும்.

கந்தசுவாமி கோயில் தெப்ப உற்சவம்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 15ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 21ம்தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 10ம் நாள் நிகழ்ச்சியாக பகல் 12 மணிக்கு சரவணப்பொய்கையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

உற்சவமூர்த்தி சரவணப்பொய்கையில் இறங்கி நீராடும்போது, பக்தர்கள் 4 கரைகளிலும் இறங்கி நீராடினார். இதைத்தொடர்ந்து, இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி 3 சுற்றுகள் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது, பக்தர்கள் வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி நீரில் மிதக்கவிட்டு வழிபட்டனர்.

* கடப்பாக்கம் கடற்கரையில் திரண்ட பக்தர்கள்
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே உள்ள கடப்பாக்கம், கடற்கரையில் மாசிமக தினமான நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இடைக்கழிநாட்டை சுற்றியுள்ள கோட்டைக்காடு, நல்லூர், விளம்பூர், பனையூர் உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள அம்மன், விநாயகர், முருகர், சிவன், பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் இருந்து உற்சவம் சுவாமிகளை மலர்களால் அலங்கரித்து டிராக்டர், இயந்திரங்களில் ஊர்வலமாக கடப்பாக்கத்தில் உள்ள கடற்கரைக்கு நேற்று காலை 8 மணி முதல் பக்தர்கள் படைசூழ கொண்டு சென்றனர்.

காலை 9 மணி அளவில் கடற்கரையில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து கடற்கரை ஓரம் அமைக்கப்பட்ட பந்தலில் கிழக்கு நோக்கி சுவாமிகளை நீண்ட வரிசையில் நிறுத்தி வைத்து தீர்த்தவாரி செய்து மகா தீபாராதனை செய்தனர். இதில் சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, மரக்காணம், கல்பாக்கம், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானோர் மாசிமகம் நட்சத்திரமான நேற்று கடலில் தலைமுழுகி சுவாமி தரிசனம் செய்தனர்.

You may also like

Leave a Comment

two × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi