Friday, May 17, 2024
Home » போலி கணக்கு மூலம் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு சினிமா தயாரிப்பு நிறுவனம் ‘லைகா’வுக்கு சொந்தமான 8 இடங்களில் சோதனை: பல கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்

போலி கணக்கு மூலம் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு சினிமா தயாரிப்பு நிறுவனம் ‘லைகா’வுக்கு சொந்தமான 8 இடங்களில் சோதனை: பல கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்

by Francis

சென்னை: போலியான கணக்குகள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்த விவகாரத்தில், பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் லைகாவுக்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள், கணக்கு காட்டாமல் நடிகர், நடிகைகளுக்கு வழங்கப்பட்ட ஊதிய பட்டியல் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து தலைநகரம் லண்டனை தலைமையகமாக கொண்டு ‘லைகா’ சினிமா தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இலங்ைக நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சுபாஷ்கரன் என்பருக்கு சொந்தமான நிறுவனமான லைகா, கடந்த 2014ம் ஆண்டு முதல் சென்னையில் தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் ரூ.100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உள்ள திரைப்படங்களை தான் எடுத்து வருகிறது. அதேநேரம், லைகா தயாரிக்கும் சினிமாவை, அந்த நிறுவனம் வெளிநாடுகளிலும் திரையிட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு முதன்மை செயல் அதிகாரியாக பாமக சட்டமன்ற தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் உள்ளார். தமிழகத்தில் முன்னணி சினிமா தயாரிப்பு நிறுவனமாக ‘லைகா’ தற்போது இருந்து வருகிறது. குறிப்பாக தற்போது வெளியான ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களையும் இந்த நிறுவனம் தான் தயாரித்துள்ளது. இரண்டாவது பாகம் ரூ.300 கோடி வரை வருவாய் ஈட்டியுள்ளதாக லைகா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதோடு இல்லாமல் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக ‘லைகா’ நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பல கோடி ரூபாய் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வந்ததாகவும், அதேபோல் கொண்டு சென்றதாகவும், வெளிநாடுகளில் முதலீடு செய்ததாகவும் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.
அதைதொடர்ந்து சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ், வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து தற்போது அமலாக்கத்துறை தனது விசாரணையை தொடங்கி உள்ளது. அதன் தொடர்ச்சியாகவும், சட்ட விரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் ‘லைகா’ நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை தி.நகர் விஜயராகவா சாலையில் உள்ள அலுவலகம், அடையாறில் உள்ள அலுவலகம், சென்னை அடுத்த காரம்பாக்கத்தில் உள்ள அலுவலகம் என 8 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதகாரிகள் துணை ராணுவம் உதவியுடன் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, லைகா நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் யாரையும் வெளியே விடவில்லை. அதேபோல் வெளியில் இருந்து வந்த யாரையும் அலுவலகத்திற்குள் விடவில்லை. லைகா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று இரவு வரை சோதனை நீடித்தது. இந்த சோதனையில், இந்தியாவில் லைகா நிறுவனம் தொடங்கிய காலத்தில் போதிய வருமானம் இல்லாமல் இழப்பை சந்தித்தது. ஆனால், சில ஆண்டுகளாக தென் இந்தியாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் திரைப்படம் எடுக்க தேவையான பணத்திற்கான முக்கிய ஆவணங்கள், வெளிநாடுகளில் திரைப்பட நிகழ்ச்சிக்கான செலவுகள் என்ற பெயரில் சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் கொண்டு சென்றதற்கான ஆவணங்கள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு இரண்டு விதமாக சம்பளம் வழங்கியதற்கான ஆவணங்கள், நிறுவனம் தொடங்கப்பட்டு சில ஆண்டுகளில் பல நூறு கோடி வருவாய் ஈட்டியதற்கான ஆவணங்கள் மற்றும் பல கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேநேரம் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து ‘லைகா’ நிறுவனத்தின் செயல் நிர்வாக அதிகாரியாக உள்ள தமிழ்குமரன் மற்றும் அதன் மூத்த நிர்வாகிகளிடம் வரவு செலவுகள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிவில் தான் ‘லைகா’ நிறுவனம் சட்டவிரோதமாக எத்தனை கோடி பணம் வெளிநாட்டிற்கு கொண்டு சென்றது என்ற முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று அமலாக்கத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளின் திடீர் சோதனையால் லைகா நிறுவனத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக சினிமா வட்டராங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

nine + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi