சென்னை: சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் கட்டிட வரைபட அனுமதியை மீறி கட்டப்பட்ட கட்டுமானங்களை அகற்றக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், ஐகோர்ட் மதுரை கிளையின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களின் விவரம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பில், சட்டவிரோத, அனுமதியற்ற கட்டுமானங்களை கண்காணிப்பது தொடர்பாக 2018ம் ஆண்டிலேயே சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கடந்தாண்டு உயர்மட்ட கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை பெருநகர மாநகராட்சி பகுதியில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையரை தலைவராகவும், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர், தலைமை திட்ட அலுவலர், நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட இணை இயக்குநர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைத்து அரசாணை வெளியிட குறுகிய கால அவகாசம் ேவண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைத்து உடனடியாக அரசாணை வெளியிட்ட அரசு மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையரின் நடவடிக்கையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்று, இந்த மனுக்களின் மீதான விசாரணை மார்ச் 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.