சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தது. இந்நிலையில், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் மற்றும் ஆதார் அட்டை விவரங்களுடனும் ஆஜராகும்படி 5 மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், 5 மாவட்ட கலெக்டர்கள் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் சேர்க்கப்படாத பிரிவின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியாது. இது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. அமலாக்கத் துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. பா.ஜ. ஆளும் மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கனிம வள குற்றங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க முடியாது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை அமலாக்கத் துறையும் மறுக்கவில்லை. குவாரி உரிமைதாரர் தவறுக்கு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியுமா? கலெக்டர்களிடம் விவரங்களை கேட்டுப் பெறலாம். விசாரணைக்கு உதவும்படி கோரலாம். சம்மன் அனுப்ப முடியாது. மாநில அரசு விவகாரங்களில் தலையிடும் வகையில் அனுப்பப்பட்டுள்ள சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
அதற்கு, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், கனிம வள சட்டம் மட்டுமல்லாமல், இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை சமர்ப்பிக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவரங்கள்அமலாக்கத்துறைக்கு வழங்கப்படவில்லை. விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது. விசாரணைக்கு உதவியாகத்தான் விவரங்கள் கேட்கப்பட்டது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பிறகு எதற்கு சம்மன் அனுப்பப்பட்டது?. விசாரணைக்கு உதவி செய்ய கேட்பதும், சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது. சம்மன் அனுப்பியதில் உள்நோக்கம் இருக்கிறது. குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் உள்ளது? எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு அமலாக்கத்துறை வழக்கறிஞர், தற்போது சம்மன் அனுப்பப்பட்டவர்கள் யாரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல. மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதால்தான் விசாரணை நடத்தப்படுகிறது. அதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என்றார்.
மீண்டும் நீதிபதிகள், அனைத்து குவாரிகளின் விவரங்களை எப்படி கேட்க முடியும். சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ள வழக்குகளின் விவரங்களை மட்டும் கேட்கலாம். அந்த தகவல்களை தராவிட்டால் வழக்கு தொடரலாம் என்றனர். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சட்டவிரோத மணல் விற்பனையில் கிடைத்த பணம் குறித்து அமலாக்க துறை விசாரிக்க முடியும். தமிழ்நாடு முழுவதும் 28 குவாரிகளில் சோதனையில், 27.70 லட்சம் யூனிட் மணல் எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, அரசு யாரையும் பாதுகாக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
அதை விடுத்து கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியது ஏன் என்றார். அதற்கு, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படாத அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ஏன் அமலாக்க துறைக்கு வழங்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு துஷ்யந்த் தவே, சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆதாரங்களைச் சுட்டிக்காட்டினால், வழங்க தயார் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான உத்தரவை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.
* நீர்வளத்துறை அதிகாரியை ஆஜராக விடாமல் நிர்பந்திப்பதாக மனு
அமலாக்க துறை சம்மனை எதிர்த்து தமிழ்நாடு அரசின் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு: அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் சட்டவிரோதமாக மணல் குவாரிகளில் மணல் அள்ளப்பட்டுள்ளது. இதனால், நீர்வளத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கூடாது என்று அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது. அதையும் மீறி தான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் சில அதிகாரிகள், அனுமதிக்கப்பட்ட அளவைவிட சட்ட விரோதமாக அதிக அளவில் மணல் அள்ளுவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அழுத்தம் கொடுக்கப்பட்டதால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதேபோல், உரிமம் பெற்றுள்ள 28 சுரங்கங்களிலும் நிபுணர் குழு மூலம் ஆய்வு நடத்தியதில், 195.37 ஹெக்டேர் பரப்பளவில் அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு மாறாக, 987.01 ஹெக்டேர் நிலப்பரப்பில் மணல் அள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நீர்வளத்துறை ஆவணங்களில், 4.05 லட்சம் யூனிட் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதும், 27.70 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டுள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.