புழல்: மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்தவர் சமத் (39). இவரது மகன் யாதுல் (18). இவர்கள் இருவரும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு புழல் அம்பேத்கர் தெருவில் தங்கியிருந்து கட்டுமான வேலைகள் செய்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகன் யாதுளை சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது யாதுலுக்கு மேற்குவங்கம் பிர்பம் மாவட்டத்தை சேர்ந்த கைருல்ஹசன் (26) என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
இதையடுத்து ஹசன், யாதுலிடம், ‘’நீ ஊருக்கு செல்லவேண்டாம், திருவான்மியூர் பகுதியில் வேலை உள்ளது அதில் உன்னை சேர்த்து விடுகிறேன்’’ என்று கூறியுள்ளார். இதை நம்பி அவருடன்சென்று தனியார் விடுதியில் தங்கியுள்ளார். அப்போது கைருல்ஹசன், யாதுலின் தந்தையிடம் செல்போனில் தொடர்புகொண்டு, தங்களது மகன் விபத்தில் சிக்கி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவசிகிச்சைக்கு 46 ஆயிரம் தேவைப்படுவதால் உடனடியாக கூகுள் பே மூலம் அனுப்பிவையுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் பணத்தை உடனடியாக அனுப்பிவைத்துள்ளார். இதன்பிறகு அந்த நபர் அங்கிருந்து தப்பிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர், புழல் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் நம்பரை வைத்து கைருல்ஹசனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், ‘’ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டில் பணத்தை இழந்தல் இந்த மோசடியில் ஈடுபட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து கைருல்ஹசனை மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.