கடலூர்: சமூக போராளியான எல்.இளையபெருமாளுக்கு சிதம்பரத்தில் நினைவு அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதற்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முறை எம்.பி.யாகவும், ஒருமுறை எம்.எல்.ஏ-வாகவும் இருந்த இளையபெருமாள் சிறந்த சமூக சீர்திருத்தவாதி என புகழாரம் சூட்டினார்.
இளையபெருமாளை கவுரவிக்கும் வகையில் சிதம்பரத்தில் அவருக்கு நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்று இளையபெருமாளின் குடும்பத்தினர் மற்றும் காட்டுமன்னார் கோயில் பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விரைவில் சந்திக்க இளையபெருமாளின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். நினைவு அரங்கம் அமைத்ததற்கு தங்கள் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.