சென்னை: சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலைகளை தடுப்பது குறித்து பல்வேறு பரிந்துரைகளை வலியுறுத்தும் 250-300 பக்க அறிக்கையை ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையிலான குழு ஐஐடியிடம் சமர்பித்தது.
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. நடப்பாண்டில் மட்டும் சென்னை ஐஐடியில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவை தமிழக அரசு கடந்த மாதம் அமைத்தது.
இந்தக் குழுவில் மொத்தம் 5 பேர் இடம்பெற்ற நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த குழு தற்போது முழுமையான விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. 250 முதல் 300 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி ஐஐடி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.
ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் பேராசிரியர்கள் இடையே இணக்கமான சூழ்நிலையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகாத வகையில் ஐஐடி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளதாக கூறப்படுகிறது.