Tuesday, May 14, 2024
Home » கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம்: மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு, ராகுல்காந்தி அதிரடி அறிவிப்பு

கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம்: மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு, ராகுல்காந்தி அதிரடி அறிவிப்பு

by Ranjith

உடுப்பி: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உடுப்பி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் உடுப்பியில் காப்பு தொகுதியில் மீனவ சமுதாய உறுப்பினர்களுடன் நேற்று ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து கர்நாடகாவில் ஆட்சியில் அமர்த்தினால் மூன்று சலுகைகள் உங்களுக்கு வழங்குகிறேன்.

மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு திட்டம், மீனவ பெண்களுக்கு ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன், ஒரு நாளைக்கு 500 லிட்டர் டீசல் வரை ஒரு லிட்டருக்கு ரூ.25 மானியம் வழங்கப்படும். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சி அமைந்து நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டத்தில் அமல்படுத்தப்படும். தற்போதைய கர்நாடக பாஜ அரசு மக்களால் தேர்வு செய்யப்படவில்லை. பல கோடி ரூபாய் செலவு செய்து பாஜ அடுத்த கட்சியில் இருந்து எம்எல்ஏக்களை வாங்கியுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்கள் பணம் மக்களுக்கே வந்து சேரும். மக்கள் நல திட்டங்களுக்கு மட்டுமே செலவழிக்கப்படும். அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

* மோடி ஒரு விஷப்பாம்பு கார்கே சர்ச்சை பேச்சு
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் ரானில் காங்கிரஸ் பேரணி மற்றும் பிரசாரத்தை தொடக்கிவைத்து மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: என்னை தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு. விஷம் இல்லை என்று நீங்கள் சொன்னால் தொட்டு நக்கி பாருங்கள். உங்களுக்கே புரியும். நக்கி பார்த்துவிடப்போகிறீர்கள். அப்படி செய்தால் இறந்துவிடுவீர்கள்.

இது நல்ல மனிதர் பிரதமர் மோடி கொடுத்தது விஷமாக இருக்காது என்று சொன்னால் நக்கி முயற்சி செய்து பாருங்கள். அதன் பிறகு நிரந்தரமாக தூங்கிவிடுவீர்கள். இவ்வாறு பேசினார். இதற்கு பா.ஜ கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்தநிலையில், ‘பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது கருத்துகள் யாரையாவது புண்படுத்தியிருந்தாலோ மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருந்தாலோ அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

You may also like

Leave a Comment

15 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi