சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் வழக்கறிஞர் பகவத் சிங் தலைமையில் வழக்கறிஞர்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நேற்று 7வது நாளாக உண்ணவிரதம் தொடர்ந்த நிலையில், இதுபற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை தலைவர் கே.பாலு முறையீடு செய்தார். அவர் கூறும்போது, தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையில் ஒன்றிய அரசு இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். உண்ணாவிரதத்தில் வயதான வழக்கறிஞர்கள் ஈடுபட்டு உள்ளனர். 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்றார். அதற்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, கோரிக்கை குறித்து, மனிதாபிமான அடிப்படையில் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சட்ட ரீதியாக தங்களால் தலையிட முடியாது. தமிழக அரசின் கவனத்திற்கு அரசு பிளீடர் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினர்.