ரிகியவிக்: ஐஸ்லாந்து நாட்டில் 14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்தில் நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்ப பகுதியை மையமாக கொண்டு நேற்று தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டது. கடைசி 14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் வடக்கு ஹிரிண்டவிக் நகரில் அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 5.2 புள்ளி பதிவாகி இருந்தது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ந்தனர். இதையடுத்து ஐஸ்லாந்து நாட்டில் தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடிப்பதற்கு முன்னதாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.