Saturday, May 18, 2024
Home » 14 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் முதல்வரின் முதன்மை செயலாளராக முருகானந்தம் நியமனம்

14 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் முதல்வரின் முதன்மை செயலாளராக முருகானந்தம் நியமனம்

by Suresh

சென்னை: தமிழக அரசின் 14 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். முதல்வரின் முதன்மை செயலாளராக முருகானந்தமும், உள்துறை செயலாளராக அமுதா, நிதித்துறை செயலாளராக உதயசந்திரன், சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக இருந்த என்.முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மேம்பாட்டு ஆணையராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த டி.உதயசந்திரன், நிதித்துறை செயலாளராகவும், ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக இருந்த பி.அமுதா, உள்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்துறை செயலாளராக இருந்த கே.பணீந்திர ரெட்டி, போக்குவரத்துறை செயலாளராகவும், போக்குவரத்து துறை செயலாளராக இருந்த கே.கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராகவும், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன்தீப் சிங் பேடி, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளராக இருந்த டாக்டர் பி.செந்தில்குமார், ஊரக வளர்ச்சித் துறை செயலாளராகவும், பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த கே.மணிவாசன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளராகவும். சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளராக இருந்த பி.சந்திரமோகன், பொதுப்பணித்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும் பொதுத்துறை செயலாளராக இருந்த டி.ஜெகன்நாதன், கூட்டுறவு- உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராகவும், பள்ளிக்கல்வித்துறை ஆணையராக இருந்த கே.நந்தகுமார், மனிதவள மேலாண்மை துறை செயலாளராகவும், மனிதவள மேலாண்மை துறை செயலாளராக இருந்த மைதிலி கே.ராஜேந்திரன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனராக இருந்த எஸ்.கணேசன், புள்ளியல்துறை இயக்குனராகவும், கூட்டுறவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக இருந்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையராக 2வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

16 − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi