ஐதராபாத்: ஐதராபாத்தில் திறந்திருந்த கால்வாயில் விழுந்து 4 வயது சிறுவன் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கனமழை கொட்டி வருவதால் தாழ்வான பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் ஜெடி மிட்லாவில் உள்ள பிரகதி நகர் பகுதியில் மிதுன் என்ற 4 வயது சிறுவன் தனது தாத்தாவுடன் நடந்து சென்றுள்ளான். அப்போது சாலையோரம் இருந்த கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் மழைநீரில் வேகமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளான்.
மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவனை கண்டு பிடிக்க முடியாத நிலையில், நிஜாம்பேட்டை அருகே உயிரிழந்த நிலையில் உடல் ஒதுங்கி இருந்தது தெரியவந்தது. ஆனால் சடலத்தை எடுக்க முயன்ற போது மழைநீரின் வேகம் மேலும் அதிகரித்ததால் சடலம் மீண்டும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பேரிடர் மீட்புப்படையினர் ஃபைபர் படகில் சென்று மிதுனின் உடலை மீட்டனர்.
இதனிடையே ஜெய்சங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் விளை நிலத்தில் மிளகாய் செடிகளுக்கான நாற்று நடும் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.