ஐதராபாத்: இந்தியா-இங்கிலாந்து இடையே ஐதராபாத்தில் நடந்துவரும் முதல்டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ள நிலையில் நேற்று 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே அளித்த பேட்டி: எங்களுடைய குறிக்கோள் எல்லாம் இன்று ஆட்டத்தின் தொடக்கத்தில் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். இங்கிலாந்து ரன் எடுப்பதை கட்டுப்படுத்த வேண்டும். இங்கிலாந்து எந்த இலக்கை நிர்ணயிக்கப்போகிறது என்பது குறித்து கவலைப்படவில்லை.
அது குறித்து யோசித்து எங்களுக்கு நாங்களே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. முதல் இன்னிங்சை விட தற்போது 2வது இன்னிங்சில் ஆடுகளம் கொஞ்சம் மாறி இருக்கிறது. பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது. கடைசி 2 நாட்கள் ஆடுகளம் மேலும் தொய்வடையும் என எதிர்பார்க்கிறேன். இந்திய ஆடுகளங்களில் பொதுவாக கடைசி 2 நாட்களில் பந்து நன்றாக திரும்பும். ஆனால் சவால் தரும் அளவுக்கு ஐதராபாத் ஆடுகளம் செயல்படாது என நினைக்கிறேன் என்றார்.