தஞ்சாவூர்: வங்கி பெண் அதிகாரியான மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு காரில் தப்பி சென்ற கணவர் விபத்தில் சிக்கி பலியானார். தஞ்சாவூர் விக்டோரியா காலனியை சேர்ந்தவர் சுந்தர்கணேஷ் (42). இவரது மனைவி நித்யா (39). வங்கி மேலாளர். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளன. நித்யா வாங்கிய தனது வீட்டை விற்பனை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
இதுதொடர்பாக நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சுந்தர் கணேஷ், தனது மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு காரில் தப்பினார். பின்னர் சுந்தர்கணேஷ், தஞ்சாவூர் பரிசுத்தம் நகருக்கு சென்று பால்பூத் உரிமையாளர் தாமரை செல்வன் (35) மற்றும் கோபி (32) ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு காரில் அதிவேகமாக செங்கிப்பட்டி சென்றுவிட்டு மீண்டும் தஞ்சாவூர் நோக்கி சென்று உள்ளார்.
முத்தாண்டிப்பட்டி பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. சுந்தர்கணேஷ் உடல் நசுங்கி பலியானார். அரிவாள் வெட்டில் காயமடைந்த நித்யா, தாமரை செல்வன், கோபி ஆகிய மூன்று பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபி உயிரிழந்தார்.