அருப்புக்கோட்டை: சென்னை, கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த மலர்மன்னன் என்ற மாணிக்கம் (61), தனது மனைவி தேவி மற்றும் மகன் கர்ணன்(25) ஆகியோருடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள குறிஞ்சாகுளத்த்தில் குடியேறினார். ரூ.2.60 லட்சம் கொள்ளையடித்தது தொடர்பாக நேற்று முன்தினம் அருப்புக்கோட்டை ேபாலீசார் மாணிக்கத்தை கைது செய்தனர்.
தந்தை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதால் அவமானம் அடைந்த மகன் கர்ணன் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே தனது மகன் காவல் நிலையத்திற்கு தந்தையை பார்த்துவிட்டு் வந்த பிறகு தற்கொலை செய்ததாகவும், போலீசார் தாக்கியதால் தற்கொலை செய்ததாகவும் கூறி தேவி கர்ணனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து தேவியை ஆர்டிஓ அலுவலகத்திற்கு அழைத்து சென்று, போலீசார் தாக்கியதில் மகன் உயிரிழக்கவில்லை என்று ஆர்டிஓ மற்றும் போலீசார் கூறினர். பின்னர் தேவி மகனின் உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார், தேவி மற்றும் உறவினர்களை போலீஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு நேற்று அழைத்து சென்றனர். பாலவநத்தம் பகுதியில் சென்றபோது ஓடும் ஜீப்பில் இருந்து தேவி திடீரென கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.