கெய்ரோ: லிபியாவில் டேனியல் புயல் தாக்கியதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 10,000 பேரை காணவில்லை. இதுவரை 700 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய தரைக்கடலில் உருவான டேனியல் புயல் லிபியாவை தாக்கியது. இதனால், கிழக்கு லிபியாவின் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் கடலோர மாவட்டமான டெர்னாவில் தொடர்ந்து பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் அணைகள் உடைந்தன. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் டெர்னா நகரம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லிபியா செம்பிறை சங்கம் நேற்று காலை வெளியிட்ட அறிக்கையின்படி டெர்னாவில் மட்டும் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். டெர்னாவில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2,000க்கும் மேற்பட்டோர் இறந்திருக்க கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், துனிசியாவில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஜெனீவாவில் உள்ள ஐநா.வின் தலைமை அலுவலகத்துக்கு பேசிய சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை அமைப்பின் லிபியாவுக்கான தூதர் தமர் ரமடான், “இந்த வெள்ளப் பேரழிவில் சிக்கிய 10,000 பேரை காணவில்லை. டெர்னாவில் மட்டும், 700 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன,” என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.