Saturday, July 27, 2024
Home » வீட்டுச்சுவையில் வித்தியாச வெரைட்டிகள்!

வீட்டுச்சுவையில் வித்தியாச வெரைட்டிகள்!

by Lavanya

நெய்ச்சோறு… இடியாப்பச்சோறு… தேங்காய்ப்பால் ரசம்…

இந்தியச் சமூகத்தில் உணவிற்கும் கலாச்சாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. உணவை வெறுமனே பசிக்கு உட்கொள்ளும் பண்டமாக இந்தியச் சமூகம் பார்த்ததில்லை. ஒவ்வொரு உணவுக்குப் பின்னாலும் ஒரு கலாச்சார நிழல் இருக்கும். ஒவ்வொரு பண்டிகையிலும் வீட்டில் சமைத்த உணவுகளை அனைவருக்கும் கொடுத்து மகிழும் பண்பாடு ஒவ்வொரு இனக்குழுவிடம் நீடிக்கிறது. தீபாவளிக்கு இனிப்பும் பலகாரமும் போல ரம்ஜானுக்கு பிரியாணி, கிறிஸ்துமஸ்க்கு கேக் என பல வகையான உணவுகளைப் பக்கத்து வீட்டினருக்கும், நண்பர்கள் பட்டாளத்திற்கும் கொடுத்து மகிழ்கிறோம் நாம்.

இப்போது ரம்ஜான் நெருங்கி வரும் நிலையில், இஸ்லாமிய சமூகத்தினர் நோன்பு இருப்பது, நோன்பு திறப்பது என இறை வழிபாட்டுக் கடமைகளை ஆற்றி வருகிறார்கள். இந்த சமயத்தில் தமிழ் முஸ்லிம்களின் உணவுகள் குறித்து பகிர்ந்துகொண்டால் சிறப்பாக இருக்கும் என வளசரவாக்கம் பிருந்தாவனம் நகரில் கிளவுட் கிச்சன் நடத்தி வரும் முகமது எர்ஷாத் என்பவரைச் சந்தித்தோம். தனது கிளவுட் கிச்சனில் சில பிரத்யேகமான ரெசிபிகளை தயார் செய்துகொண்டிருந்த எர்ஷாத் “ சினிமா, இலக்கியம் போல உணவும் எனக்கு ஒரு கலைதான்’’ என பேச ஆரம்பித்து, பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“சொந்தவூர் புதுக்கோட்டை பக்கம். படித்தது டிப்ளமோ மெக்கானிக்கல் இஞ்சினியரிங். படித்து முடித்துவிட்டு 2011ல் டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தேன். ஆரம்பத்தில் மீடியாவில் வேலை பார்த்தேன். அதன்பிறகு சில படங்களில் பணி புரிந்தேன். இப்படித்தான் சென்னை வாழ்வு சென்றுகொண்டிருந்தது. கொரோனா காலத்திற்குப் பிறகு பெரிதாக வேலையும் இல்லை. வெளியே செல்லவும் முடியவில்லை. முழுநாளும் வீட்டில் இருந்த படியேதான் இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது, அறையில் உள்ள நண்பர்கள் அனைவருக்கும் நான்தான் சமைப்பேன். சமைக்கும்போதே எனது சாப்பாடு நன்றாக இருக்கிறது என நண்பர்கள் சொல்லுவார்கள். அதற்கு முன்பு ஊரில் வீட்டில் இருக்கும்போதே அம்மாவோடு சேர்ந்து சமைப்பேன்.

வீட்டில் இருப்பவர்களுக்கும் சமைத்துக் கொடுப்பேன். அங்கு சமைத்த அனுபவம்தான் இங்கு சென்னைக்கு வந்தபிறகு நண்பர்களுக்கு சமைக்கும் அளவிற்கு உயர்த்தியது. அதன்பிறகு, சென்னையில் நண்பர்கள் வீட்டிற்கு சென்றாலும் கூட நானேதான் சமைப்பேன். சமையல் என்பதை ஒரு அருமையான கலை என உணர ஆரம்பித்தேன். பெரும்பாலும் வீட்டில் இருக்கும் நேரத்தில் கிச்சனில்தான் அதிகம் செலவிடுவேன். அந்தளவிற்கு உணவின்மீது ஒரு ஆர்வம் வரத் தொடங்கியது. தமிழ் இஸ்லாமிய உணவுகள் எப்போதுமே ஒரு யுனிக் ஆன உணவு. பெரும்பாலும் பல இடங்களில் கிடைக்காத உணவும் கூட. நான் முஸ்லிம் என்பதால் எங்கள் வீட்டில் எப்போதுமே முஸ்லிம் ஸ்டைல் உணவுகள்தான் சமைப்பார்கள்.

வீட்டு விசேஷம், பண்டிகை நாட்கள் என பல சமயங்களில் சமைக்கப்படும் இஸ்லாமிய உணவுகள் சுவையில் தனித்தன்மை உடையவை. சிறுவயதில் இருந்தே இந்த உணவுகளை சாப்பிட்டு வளர்ந்த எனக்கு, அதை சமைப்பதுமே பிடித்திருந்தது. அதனால், அந்த வகை உணவுகளையும் எனது அறையில் சமைக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் இந்த உணவுகளை பலருக்கு கொண்டு சேர்க்கலாம் என நினைத்தேன். அதன் ஆரம்பமாகத்தான் இப்போது இந்த கிளவுட் கிச்சனைத் தொடங்கி இருக்கிறேன். முஸ்லில் ஸ்டைல் உணவுகள் என்பதால்தான் உணவகத்தின் பெயரைக்கூட தமிழ் முஸ்லிம் கிச்சன் என வைத்திருக்கிறேன். எனது கிச்சனில் ரொம்ப ஸ்பெஷலான உணவு என்றால் அது பிரியாணிதான். மற்ற இடங்களில் கிடைக்கிற மாதிரி இல்லாமல், சீரக சம்பா அரிசியில் அசத்தலாக செய்த பிரியாணி.

என்னிடம் வாங்கிச்சென்று சாப்பிடக்கூடிய அனைவருமே பாராட்டும்போது இந்த பிரியாணியை மென்சன் செய்யாமல் இருக்க மாட்டார்கள். அந்தளவிற்கு அதன் செய்முறை இருக்கும். பிரியாணிக்கு என்ன அரிசி வாங்குகிறோம் என்பதில் இருந்து எவ்வளவு மசாலா சேர்க்கிறோம் என்பது வரை அனைத்தும் மிக முக்கியம். சமையலைப் பொருத்தவரை ஒவ்வொரு பொருளும் எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது தெரிந்தால்தான் அதை எந்தளவு பயன்படுத்த வேண்டும் என்பது தெரியும். அதுதான் சமையலின் மூலதனமே. சுவையும் கூட அதில்தான் இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு பொருளின் பயன்பாடுமே எனக்கு நன்றாகத் தெரியும். இடியாப்பச்சோறு எனது கிச்சனில் ரொம்ப ஃபேமஸ். பெரும்பாலும் சென்னையில் வேறு எங்குமே கிடைக்காது.

ஏனெனில் இது வீட்டில் மட்டுமே தயார் செய்யும் உணவு. கடைகளில் செய்ய மாட்டார்கள். இந்த இடியாப்பச்சோறு எங்களது கிச்சனில் கிடைக்கும். நெய்ச்சோறு கூடவே கோழிக்குழம்பும் கொடுக்கிறேன். இது முழுக்கவே இஸ்லாமிய ஸ்டைல் உணவு. இஸ்லாமிய ஸ்டைல் நெய்ச்சோறு கேரளாவில் ரொம்ப பிரபலம். நெய்ச்சோறுக்கு கோழிக்குழம்புதான் காம்பினேசன். அதையுமே நான் எனது கிச்சனில் கொடுத்து வருகிறேன். இதுபோக மீல்ஸ் இருக்கிறது. இந்த மீல்ஸில் மீன் குழம்புதான் ஸ்பெஷல். ஏனெனில் இது மாங்காய் போட்ட மீன் குழம்பு. எங்கள் ஊரில் ஸ்பெஷலாக செய்யப்படும் இந்த மீன் குழம்பை சென்னை மக்களுக்கு எந்த மாதிரி பிடிக்குமோ அப்படி செய்து கொடுக்கிறேன்.

இதுகூடவே சென்னையில் எங்குமே கிடைக்காத தேங்காய்ப்பால் ரசம் கொடுத்து வருகிறேன். இது முழுக்கவே எங்க ஊர் ரசம். தேங்காயைத் துருவி அதில் பால் எடுத்து அந்த பாலில் ரசம் வைப்பார்கள். சீரகமும் சோம்பும் அதிகம் சேர்த்து வைக்கப்படும் இந்த ரசம் சுவையில் தனித்துவமானது. சென்னை மக்களுக்கு இந்த ரசம் புதுசுதான். எங்கள் ஊரில் கல்யாணத்திற்கே இந்த தேங்காய்ப்பால் ரசம்தான் கொடுப்பார்கள். அதையும் கொடுத்து வருகிறேன். இதுபோக, வஞ்சிரம் ஃப்ரை கொடுக்கிறேன். தவா ஃப்ரான் ஃப்ரை, சீலா ஃபிஷ் ப்ரை, சிக்கன் 65, மாசி கருவாடு சம்பல் என அனைத்தும் கொடுத்து வருகிறேன். இவை அனைத்துமே நானே சமைப்பது.

நான் ஒரே ஆளாக வீட்டில் சமைத்து டெலிவரி செய்வதால் தினமும் சுவை ஒரே மாதிரி இருக்கும். இந்த உணவுகள் அனைத்துமே காயல்பட்டினம் ஸ்டைல் உணவுகள். லஞ்ச் மட்டும் இல்லாமல் இரவும் டின்னருக்கும் இந்த உணவுகள் அனைத்தையும் கொடுத்து வருகிறேன். இது ரம்ஜான் மாதம் என்பதால் மாலையில் இஃப்தார் பாக்ஸ் கொடுத்து வருகிறேன். அந்த பாக்ஸில் நெய்ச்சோறு, கோழிக்குழம்பு, இளநீர் பாயாசம், பொரிச்ச கோழி, திராட்சை ஜூஸ் என மொத்தமாக ஒரே பாக்ஸாக கொடுத்து வருகிறேன். பலர் இந்த உணவுகளை நேரடியாக எனது வீட்டிற்கு வந்தும் வாங்கிச் செல்கிறார்கள். இன்னும் சிலர் உணவு டெலிவரி செய்யும் ஆன்லைன் ஆப்களின் மூலம் ‘தமிழ் முஸ்லிம் கிட்சன்’ என்ற எனது கிளவுட் கிட்சனைத் தேர்வு செய்து அதன் மூலமும் எனது உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். கூடிய சீக்கிரமே இந்த கிச்சனை மெஸ் ஆக மாற்றப்போகிறேன். இதற்கும் எனது வாடிக்கையாளர்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்’’ என நம்பிக்கையுடன் பேசி முடித்தார் எர்ஷாத்.

– ச.விவேக்

You may also like

Leave a Comment

four × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi