தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை விநாயகபுரத்தில் உள்ள ஒரு வீட்டின் கதவில், வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மடக்கி பிடித்து காசிமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
போலீசார் விசாரணையில் அவர், மணலி ஹரிகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சுபாஷ் (19) என்பது தெரியவந்தது. சுபாஷின் தந்தை முனுசாமி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, தனது வீட்டை உறவினரான அன்பு என்பவருக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளார். இது சுபாசுக்கு பிடிக்கவில்லை. அந்த ஆத்திரத்தில்தான் பெட்ரோலை ஊற்றி அந்த வீட்டை சுபாஷ் எரித்தது தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட சுபாஷை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.