ஆவடி: ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (38). இவர், பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றுவிட்டு நேற்று காலை 9.30 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த துணிகள் சிதறிக்கிடந்தன. மேலும், ஒரு ஜோடி தங்க வளையல் மற்றும் தாலி சரடு உள்பட சுமார் 10 சவரன் நகைகள் மற்றும் விலை உயர்ந்த செல்போன் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.