ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காந்தி சாலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தினமும் 100 முதல் 150 பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், நிலம் பத்திரப்பதிவு செய்யும்போது அதிக அளவில் லஞ்சம் கைமாறுவதாக, கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை 5.30 மணியளவில், லஞ்ச ஒழிப்பு போலீசார், சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, பணியில் இருந்த சார்பதிவாளர் சகிலா பேகம் மற்றும் அலுவலர்களிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அங்கு நடந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 4 ஆயிரம் சிக்கியது.