தர்மபுரி: தர்மபுரியில் நேற்று பாமக தலைவர் அன்புமணி எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதாலும் இதர வேலைகள் இருப்பதாலும் நான் அதில் கலந்து கொள்ளவில்லை. பிறகு ஒருநாளில் அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்ல உள்ளேன். சாதிவாரி கணக்கெடுப்பை மாநில வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். ஆனால் ஒரு சில கட்சித் தலைவர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்கிறார்கள். அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஒன்றிய அரசு அலுவலகங்கள், எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவமனைகளுக்கு அரைநாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த அடிப்படையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.