சென்னை: அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்குமார் வீடு திரும்பினார். அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் அந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்துமுடிந்தது. அதனையடுத்து அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் இருந்தது. எனவே இடையில் கிடைத்த பிரேக்கில் அஜித் சென்னையில் இருந்தார்.
இந்நிலையில் அவர் முழு உடல் பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சென்றார். அப்போது அவருக்கு மூளையிலிருந்து காதுக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டதாகவும், அவருக்கு சிகிச்சை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இது அஜித் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து அஜித் வீடு திரும்பியிருக்கிறார். இதுகுறித்து சுரேஷ் சந்திரா வெளியிட்டிருக்கும் தகவலில், “மருத்துவ சிகிச்சை முடிந்து அஜித்குமார் வீடு திரும்பியிருக்கிறார். காதுக்கு அருகில் நரம்பு வீக்கத்தை சிகிச்சை அளிக்கப்பட்டு நேற்று இரவே சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையில் ஓய்வில் இருந்த அவர் இன்று அதிகாலை வீடு திரும்பியிருக்கிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அஜித்குமார் நலமுடன் வீடு திரும்பிவிட்டார் என்று கூறப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்து இருக்கின்றனர்.