சென்னை: சின்னத்திரையில் பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் துணிவு, குருவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து பிரபலம் பெற்றவர் அப்சல் பாஷா (எ) பிர்லா போஸ். இவர் மதுரவாயல் அடுத்த ஓம் சக்தி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர், கடந்த வாரம் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்று இருந்தார். இவரது 15 வயது மகன் தாக்கப்பட்டு வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.
இதனால் உடனடியாக வீட்டுக்கு வந்த பிர்லா போஸ் மகனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு விசாரித்தபோது 10 பேர் கொண்ட கும்பல், டியூஷன் முடித்துவிட்டு சென்றபோது வழிமறித்து தாக்கி விட்டு சென்றதாக சிறுவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகர் பிர்லா போஸ் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்ட போது வீட்டின் கீழ் தளத்தில் உள்ள சிறுவர்கள் தனது மகனை தாக்கி இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக அவர் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டின் மேல் தளத்தில் உள்ள சிறுவனை பார்க்க சில நண்பர்கள் வந்ததாகவும் அவர்கள் பார்க்கிங்கில் இருந்த காரை சேதப்படுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது நடிகரின் மகன் அவர்களிடம் தட்டிக் கேட்டதால் மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த வீட்டு சிறுவன் நண்பர்களை அழைத்து வந்து, பிர்லா போஸ் மகனைதாக்கி விட்டு சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.