சிம்லா: இமாச்சலில் அரசின் நிதி மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் கட்சியின் உத்தரவை மீறிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இமாச்சல் பிரதேசத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில், 43 எம்எல்ஏக்களை கொண்ட ஆளும் காங்கிரசை எதிர்த்து 25 எம்எல்ஏக்களை கொண்ட பாஜ கட்சி, வேட்பாளரை நிறுத்தியது. வாக்களிப்பில் காங்கிரசின் 6 அதிருப்தி எம்எல்ஏக்களும், 3 ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்களும் கட்சி மாறி பாஜவுக்கு வாக்களித்தனர்.
இதனால், பாஜ, காங்கிரஸ் வேட்பாளர்கள் தலா 34 ஓட்டுகள் பெற்று சமநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, குலுக்கல் மூலம் பாஜ வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார். இதன் காரணமாக, காங்கிரஸ் அரசின் பெரும்பான்மை கேள்விக்குறியானதைத் தொடர்ந்து, முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது. இந்தநிலையில் பொதுப்பணித் துறை அமைச்சரும் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகனுமான விக்ரமாதித்ய சிங் திடீரென பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவும் பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை முதல்வர் சுக்கு மறுத்தார்.
இமாச்சலில் அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பங்களால் காங்கிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, இமாச்சலில் ஆட்சியை தக்க வைக்க நடவடிக்கை எடுப்பதற்காக கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்பட 3 மூத்த பார்வையாளர்களை அம்மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார். அவர்கள் அனைத்து எம்எல்ஏக்களையும் தனித்தனியாக சந்தித்து பேசி கட்சியில் ஏற்பட்ட பிளவை சரி செய்தனர்.
அடுத்த கட்டமாக, கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டது. அவர்களுக்கு கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நோட்டீஸ் தந்து, 7 நாளில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் ஆளும் காங்கிரஸ் அரசின் நிதி மசோதாவுக்கு வாக்களிக்கும்படி கட்சியின் கொறடா கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் கொறடா உத்தரவை மீறியதால் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் சட்டப்பேரவை சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா தகுதி நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார். இது குறித்து சபாநாயகர் பதானியா கூறுகையில்,‘‘காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரஜிந்தர் ரானா, சுதிர் சர்மா, இந்தர்தத் லகன்பால், தேவிந்தர்குமார் பூட்டோ, ரவி தாக்கூர், சைதன்யா சர்மா ஆகிய 6 எம்எல்ஏக்களும் கட்சி தாவல் தடை சட்டத்தின் விதிகளை மீறியுள்ளனர். இதனையடுத்து 6 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது உடனடியாக அமலுக்கு வருகின்றது” என்றார்.
* ஆட்சிக்கு ஆபத்தில்லை டி.கே.சிவக்குமார் அறிவிப்பு
இமாச்சல் பிரச்னை குறித்து காங்கிரஸ் மேலிட பார்வையாளர் டிகே சிவக்குமார் கூறுகையில்,’ மாநிலங்களவை தேர்தலில் அபிஷேக் மனு சிங்வியின் தோல்விக்கு இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பொறுப்பேற்றுள்ளார். கட்சி எம்எல்ஏக்களிடம் தனித்தனியாக பேசி அனைத்து வேறுபாடுகளும் களையப்பட்டு விட்டன. இமாச்சல் முதல்வர் மாற்றம் என்ற கேள்விக்கு இடமில்லை. 5 ஆண்டுகள் அவர் பதவியில் நீடிப்பார். அனைத்து உள்விவகாரங்களையும் சீர்செய்ய ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பதவியை ராஜினாமா செய்த பொதுப்பணித் துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தனது முடிவை வாபஸ் பெற்றுள்ளார்’ என்றார்.
* மோடி, அமித்ஷாவுக்கு தோல்வி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘மற்ற மாநிலங்களைப் போலவே, இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை சீர்குலைக்க பணபலம், ஆட்சி பலம் போன்ற விளையாட்டை பாஜ தொடங்கியுள்ளது. ஆனால் தோல்வியடைந்துள்ளது. ஒன்றைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறோம். பிரதமரும், ‘சாணக்யா’ என்று அழைக்கப்படுபவர்களும் இமாச்சலில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளனர். அங்கு நிலைமை முற்றிலும் காங்கிரசின் கட்டுப்பாட்டில் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
* காப்பாற்றிய பிரியங்கா
இமாச்சல் காங்கிரஸ் அரசை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காப்பாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. கார்கே உள்ளிட்ட தலைவர்களுடன் தொடர்பு கொண்டு மூத்த தலைவர்களான பூபிந்தர் சிங் ஹூடா, டி.கே. சிவக்குமார் மற்றும் பூபேஷ் பாகேல் ஆகியோரை உடனடியாக பார்வையாளர்களாக அனுப்பி, கட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்கள் அல்லது வேலை செய்பவர்கள் யாரையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்ற கடுமையான செய்தியையும் பிரியங்கா வழியாக அவர்கள் தெரிவித்தது தற்போது தெரிய வந்துள்ளது.