சென்னை: சென்னையில் இன்று நடக்கவிருந்த அண்ணாமலை நடைபயணத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அதே நேரத்தில் பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயண யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியாக அவர் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
நேற்று அவர் உத்திரமேரூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி தொகுதிகளில் நடை பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். அவரின் நடைபயணம் சென்னையில் நிறைவு பெறுவதாக பாஜ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி தொகுதியில் யாத்திரை செல்ல அண்ணாமலை திட்டமிட்டு இருந்தார். இந்த யாத்திரையில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் சென்னை நடைபயணத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். வடமாநிலங்களில் பாஜ நடத்தும் பேரணியில் கலவரம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு நடைபயணத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவித்து உள்ளது. அதே நேரத்தில் தங்கசாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று உரையாற்றுகிறார்.