சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் டிசம்பர் 8ம் தேதி நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் குழு அறிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த ஜனவரி 9ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடந்தது. தேர்தல் நடந்த ஜனவர் 9ம் தேதி வாக்கு சாவடியில் நடந்த பிரச்னையால் தேதி குறிப்பிடப்படாமல் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.இந்த நிலையில் தேர்தலை நடத்த கோரி வழக்கறிஞர்கள் சத்தியபால், எம்.வேல்முருகன், ஆர்.கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிட்டனர். இந்த முறையீட்டை ேகட்ட நீதிபதிகள் தேர்தல் நடத்தும் குழுவிடம் கருத்து கேட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. தேர்தல் நடத்தும் குழுவை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாதங்களை வழக்கறிஞர்கள் முன்வைத்தனர்.
இதையடுத்து, தேர்தலை நடத்துவது தொடர்பான ஏற்பாடுகள், தேதி, எந்த இடத்தில் தேர்தலை நடத்துவது என்பது குறித்து தெரிவிக்குமாறு தேர்தல் நடத்தும் குழுவுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தலை வழக்கறிஞர்கள் சங்க நூலக கட்டிடத்திலேயே நடத்துவது என்றும் டிசம்பர் 8ம் தேதி தேர்தலை நடத்தலாம் என்றும் தேர்தல் நடத்தும் குழு நீதிபதிகளிடம் தெரிவித்தது. இதையடுத்து, இந்த விஷயத்தில் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். தேர்தலில் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், முன்னாள் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், முன்னாள் செயலாளர் எம்.வேல்முருகன், சி.ராஜசேகரன், சத்தியபால், ஆ.மோகன்தாஸ், ஆர்.பாலசுப்பிரமணியன், டாக்டர் பத்மா, மகாவீர் சிவாஜி ஆகிய 9 பேர் போட்டியிடுகிறார்கள்.
துைண தலைவர் பதவிக்கு அப்துல்ரஹ்மான், அறிவழகன், கே.பாரதி, கே.கோபால், முரளி, நித்தியானந்தன், ராமசிவசங்கர், ஜெ.தாமஸ் ஆகிய 8 பேர் போட்டியிடுகிறார்கள். செயலாளர் பதவிக்கு ஆர்.கிருஷ்ணகுமார், எஸ்.காமராஜ், பி.ஜி.குமரகுரு, ஆர்.மோகன்தாஸ், ஆர்.பிரபு, ராஜா மதிவாணன், கே.சசிகுமார், டி.எஸ்.சசிகுமார், வி.சிவசண்முகம், எம்.உதயகுமார் ஆகிய 10 பேர் போட்டியிடுகிறார்கள்.
பொருளாளர் பதவிக்கு ஜி.ராஜேஷ், வி.ஆனந்த், தாரா உள்ளிட்ட 9 பேர் போட்டியிடுகிறார்கள். நூலகர் பதவிக்கு என்.விஜயராஜ், வி.எம்.ரகு, எஸ்.என்.சுப்பிரமணி, இளையராஜா கந்தசாமி, கஜலட்சுமி ராஜேந்திரன், பி.போத்ராஜ், ஜிம்ராஜ் மில்டன் உள்ளிட்ட 12 பேர் போட்டியிடுகிறார்கள்.
இதேபோல் 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு வி.இ.அனிஸ்குமார், சாம் ஆர்தர் ஜெபக்குமார், எம்.தேவபிரபு, எஸ்.கிருஷ்ணபிரசாத், பி.பிரகாஷ், பிரஸ்ணேவ், பி.குமணன், எல்.இண்டியன், எஸ்.மகேந்திரன், ஏ.ரமேஷ், கே.சங்கர் உள்ளிட்ட 44 பேர் போட்டியிடுகிறார்கள். ஐந்து இளைய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு பி.பிரவீண் சமாதானம், டி.வசந்தகுமார், வி.இஸட்.விக்டர், இ.சவுந்தரராஜன் உள்ளிட்ட 33 பேர் போட்டியிடுகிறார்கள். உறுதியான தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் டிசம்பர் 8ம் தேதி நடத்தப்படுமா? என்ற கேள்வியும் வழக்கறிஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.