Sunday, May 19, 2024
Home » உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் விவகாரம் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க தடைகோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் விவகாரம் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க தடைகோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

by Dhanush Kumar

சென்னை: வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை அறிவிக்கும் வரை, நம்பர் பிளேட் பொருத்தாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்க தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச் செயல்கள், பாதுகாப்பு மீறல்களுக்காக வாகனங்களின் நம்பர் பிளேட்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் பொருத்துவதை கட்டாயமாக்கி ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி, 2019 ஏப்ரல் மாதத்துக்கு பின் அனைத்து புதிய வாகனங்களிலும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் பொருத்தப்படுகின்றன. அதற்கு முந்தைய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களை உற்பத்தி செய்யவும், விற்கவும் பல்வேறு நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த நிறுவனங்களை மாநிலங்களில் நியமித்து மாநில அரசு அறிவிக்க வேண்டும். ஒன்றிய அரசு உத்தரவிட்டு, 5 ஆண்டான நிலையில் தமிழகத்தில் இதுவரை எந்த நிறுவனங்களையும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் உற்பத்தி நிறுவனங்களாக அரசு அறிவிக்கவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் பொருத்தவில்லை என்று காவல் துறை அபராதம் விதிப்பதால், அங்கீகாரமில்லாத நிறுவனங்களில் நம்பர் பிளேட்கள் பொருத்தப்படுகிறது. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் நிறுவனங்களை அறிவிக்க கோரி அரசுக்கு அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை வாகனங்களுக்கு அபராதம் விதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மார்ச் 26க்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

You may also like

Leave a Comment

seventeen − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi