காஞ்சிபுரம்: கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று 1649 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 548 கன அடியாக சரிந்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இடி, மின்னலுடன் மழை கொட்டுவதால் சாலை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
சென்னையில் அதிகளவு மழை பெய்தாலும் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஏரியில் நீர்வரத்து குறைந்துள்ளது. 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போதைய நீர்மட்டம் 19.83 அடியை எட்டியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 2,562 மில்லியன் கன அடியாக இருப்பு உள்ளது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து கொண்டு வருகின்றர்.