சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூரில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளை 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் வடகிழக்கு பருவமழை 50 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் இன்று வரை இயல்பாக 718.5மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 1078.2மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. அக்டோபர் 1 முதல் இன்று வரை இயல்பாக 387.7மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 375.3மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்டி வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச குறைந்தபட்ச வெப்பறிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் நாளை வரை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.