சென்னை: இதய அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், காவேரி மருத்துவமனையில் நேற்று காலை செந்தில் பாலாஜிக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் நேற்று மாலை செந்தில் பாலாஜி வேறு வார்டுக்கு மாற்றப்பட்டார்.
தற்போது நலமுடன் இருக்கிறார் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் கலைஞர் நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் மெகா மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. பல் மருத்துவம், காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை அளிக்க 100 இடங்களில் முகாம்கள் நடக்கவுள்ளன. சென்னையில் 10 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்து பயனடையலாம் என்று கூறினார்.