Saturday, July 27, 2024
Home » நலம் காக்கும் பருப்பு வகைகள்

நலம் காக்கும் பருப்பு வகைகள்

by Nithya

நன்றி குங்குமம் தோழி

பொட்டுக் கடலை

பொட்டுக்கடலையை பொரிகடலை, உடைத்தகடலை என்றும் கூறுவார்கள். அவை பருப்பு குடும்பத்தின் ஒரு பகுதியாகும். பொட்டுக்கடலையை தேங்காயுடன் சேர்த்து
சட்னியாக அரைத்து சாப்பிடுவார்கள். ஆனால் பொட்டுக்கடலையின் நன்மைகளை பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரிவது இல்லை. பொட்டுக்கடலையில் உள்ள ஊட்டச்சத்துகள் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

இது வரை நீங்கள் பொரிகடலையை பொழுது போக்கிற்காக சாப்பிட்டீர்கள் என்றால் இனி தினமும் அதை தொடர்ந்து செய்யுங்கள். ஏனென்றால் ஒருகைப்பிடி தினமும் சாப்பிட்டால், அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை செய்கிறது. இதை சாப்பிடுவதால் உங்களுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், நீர்ச்சத்து, கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின்கள் அடங்கி இருக்கிறது.

வறுக்கப்பட்ட பொட்டுக்கடலை புரதங்கள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், உணவு நார்ச்சத்து மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். அவற்றின் புரத உள்ளடக்கம் இறைச்சிக்கு சமம் மற்றும் மாற்றாக செயல்பட முடியும். கொழுப்புச் சத்தும் குறைவாக இருப்பதால், எடையைக் கவனிப்பவர்களுக்கு ஒரு சிறந்த சிற்றுண்டியாக அமைகின்றன. பொட்டுக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஊட்டச்சத்து மதிப்புகள்

ஊட்டச்சத்து நன்மைகள்

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: வறுத்த பொட்டுக்கடலை உங்க எடை இழப்பில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்துக்கள் உணவை எளிதாக ஜீரணிக்க உதவுகிறது. இதனால் வயிறு வீங்கிய உணர்வு மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. இது எளிதான குடல் இயக்கத்தை ஏற்படுத்துகிறது. மலத்தை கடினப்படுவதை தடுக்கிறது.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது : வறுத்த பொட்டுக்கடலையில் மாங்கனீஸ், போலேட், பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்ற இதய நோய்களை குறைக்கும் சத்துக்கள் உள்ளன. உடலுக்கு பல்வேறு செயல்பாடுகளைச் செய்வதற்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கும் உதவுகின்றன.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது : வறுத்த பொட்டுக்கடலை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. குளுக்கோஸ் ஏற்ற இறக்கங்களை சரி செய்கிறது. சர்க்கரை செயலிழப்பில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. நீரிழிவு நோயில் இருந்து விழிப்புடன் இருக்க உதவுகிறது.​புரதத்தின் சிறந்த ஆதாரம்: வறுத்த பொட்டுக்கடலை புரதத்தின் சிறந்த ஆதாரமாகும். எடை இழப்புக்கு புரத ஆதாரமான உணவை எடுப்பது நல்லது. எனவே எடை இழப்புக்கு வரும் போது வறுத்த பொட்டுக்கடலையை தேர்ந்தெடுங்கள்.

​ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்க உதவுகிறது: எலும்புகளை பராமரிக்கவும், ஏராளமான நோய்களைத் தடுக்கவும் வறுத்த பொட்டுக்கடலை பெரிதும் உதவுகிறது. இதில் தாமிரம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும், அசாதாரண எலும்பு உருவாக்கத்திற்கும், எலும்பு பலவீனம், மூட்டு வலிகள் போன்ற நோய்களை தடுக்கவும் பொட்டுக்கடலை உதவுகிறது.

ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது: வறுத்த பொட்டுக்கடலையில் உள்ள பாஸ்பரஸ் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை
மேம்படுத்த உதவுகிறது. உடலின் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் அதிக பாஸ்பரஸ் உட்கொள்ளல் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், உங்கள் உடலில் நிகழும் பல உயிரியல் செயல்முறைகளில் பாஸ்பரஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.

புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கிறது: வறுத்த பொட்டுக்கடலையில் செலினியம் அதிகளவில் காணப்படுகிறது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றி ஆகும். டி.என்.ஏ சேதத்தை குறைப்பதற்கும் தனிநபர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும் செலினியம் திறன் ஒரு சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். எனவே பொட்டுக்கடலையை உபயோகப்படுத்துங்கள், கூடுதல் நன்மைகளை பெறுவீர்கள்.

நோயெதிர்ப்பு சக்தி: சிலர் அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சாப்பிட்டு வந்தால் நோயெதிர்ப்பு சக்தி மேம்படும். நோய்களின் தாக்குதல்களில் இருந்து விடுபடலாம். மேலும் பருப்பு வகைகள் அனைத்துமே மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

சருமம்

உடைத்த கடலை பருப்பை தினமும் சாப்பிட்டு வருபவர்களுக்கு எளிதில் தோல் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படாது. பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் முகம் பொலிவாக இருக்கவேண்டும் என்று க்ரீம்களை பயன்படுத்துவார்கள். இவர்கள் தினமும் உடைத்த கடலை பருப்பை சாப்பிட்டு வந்தால் முகப் பொலிவு மேம்படுவதோடு, தோலில் சுருக்கங்கள் ஏற்படும் தன்மையும் நீங்கும்.

உடல் எடை : உடைத்த கடலை பருப்பை சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை பெற உதவுகிறது. உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

நரம்புகள்: உடல் சீராக இயங்குவதற்கு நரம்புகள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். பொட்டுக்கடலை பருப்பை சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள புரதங்கள் மற்றும் இதர சத்துக்கள் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.கர்ப்ப காலத்தில் ஏற்றது: இரும்பு என்பது உங்கள் உடலில் பல முக்கிய பாத்திரங்களை வகிக்கும் ஒரு முக்கிய கனிமமாகும். இரும்புச்சத்து குறைபாடு பெண்களுக்கு ரத்த சோகை போன்ற கடுமையான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆக்ஸிஜனை வழங்க இரும்பு உதவு
கிறது. கருவின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைபாடு குறை பிரசவம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

இரும்பு நோயெதிர்ப்பு ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. இது கர்ப்ப காலத்தில் தொற்றுக்கு எதிராக போராடும். கர்ப்ப காலத்தில் உங்கள் எடையை பராமரிக்கவும் இது உதவும்.
உடனடி புத்துணர்வை தருகிறது: பொட்டுக்கடலையில் அதிகமாக புரதச்சத்து மற்றும் இரும்புச் சத்து உள்ளது. அதனால்தான் அதை சாப்பிட்ட பிறகு உடனடியாக புத்துணர்வு கிடைக்கிறது. நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்றால் தினமும் இரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிட வேண்டும்.

மலச்சிக்கலை தீர்க்கும்: தவறான உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறையால் இன்றைய காலகட்டத்தில் மலச்சிக்கல் பிரச்னையால் பாதித்து வருகின்றனர். இதை தவிர பல்வேறு வியாதிகளின் காரணமாகவும் மலச்சிக்கல் ஏற்படலாம். நீங்கள் மலச்சிக்கல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்தால், நாள் முழுவதும் நீங்கள் சோம்பலாகவும், மன உளைச்சலுடனும் இருப்பீர்கள். மலச்சிக்கல் இருக்கும் பெண்கள் தினமும் பொட்டுக்கடலை உண்டு வந்தால் பிரச்னை தீரும்.

முதுகு வலி தீரும்: பலவீனம் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு முதுகில் வலி ஏற்படுவது உண்டு. இது போன்ற பெண்கள் ஒருகைப்பிடி அளவு பொட்டுக்கடலை தினமும் சாப்பிட்டால் இந்த பிரச்னை தீரும். ஏனென்றால் இதில் அதிக அளவில் புரதச்சத்து உள்ளது. இது நம் தசைகளை இலகுவாக்குகிறது.

பக்க விளைவுகள்

*வறுத்த பொட்டுக்கடலை சரியான சத்தான சிற்றுண்டி, ஆனால் மற்ற எல்லா விஷயங்களைப் போலவே, இதுவும் சில குறைபாடுகளைக் கொண்டிருக்கலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது சிறிய பகுதிகளாக எடுத்துக் கொண்டால் உங்கள் வயிற்றுக்கு உதவியாக இருக்கும். மேலும் அவற்றை அதிகமாக உட்கொள்வது வீக்கம் மற்றும் வாயுவை ஏற்படுத்தும்.

*அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதும் எடை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே நீங்கள் எடை குறைக்க முயற்சி செய்தால் சிறிய பகுதிகள் சிறந்த தேர்வாக இருக்கலாம். வறுத்த பொட்டுக்கடலையில் நீங்கள் என்ன சேர்க்கிறீர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹெல்த்தி ரெசிபி

பொட்டுக்கடலை உருண்டை

தேவையானவை:
பொட்டுக்கடலை – 1 கப்,
நாட்டுச் சர்க்கரை – 1/2 கப்,
நெய் – 3 டீஸ்பூன்,
துருவிய தேங்காய் – 1/4 கப்,
முந்திரி – 2 டீஸ்பூன்,
பாதாம் – 2 டீஸ்பூன்,
திராட்சை – 2 டீஸ்பூன்,
ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்.

செய்முறை: ஒரு கடாயில், துருவிய தேங்காய் வாசனை வரும் வரை வறுக்கவும். மற்றொரு கடாயில் 2 டீஸ்பூன் நெய்யை சூடாக்கி, முந்திரி, திராட்சை மற்றும் பாதாமை பொன்னிறமாகும் வரை வறுத்த தனியாக வைக்கவும். நீங்கள் விரும்பினால் பாதாம் பருப்புக்குப் பதிலாக திராட்சையும் பயன்படுத்தலாம். பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். அரைத்த பொடியை நன்றாக சல்லடையால் சலித்துக் கொள்ளவும். இப்போது வறுத்த பருப்புகளை பொடித்த மாவுடன் சேர்த்து கலக்கவும். பிறகு நெய் சேர்த்து இறுக்கமான உருண்டைகளாக உருட்டவும்.

வெங்காய மருத்துவம்

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும்.
* வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுட வைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட, கட்டிகள் உடையும்.
* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல்வலி, ஈறுவலி குறையும்.
* வெங்காயச்சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
* பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்துவர மேகநோய் நீங்கும்.
* புகைபிடிப்பவர்கள் வெங்காயச்சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
* 6 வெங்காயத்தை 500 மில்லி நீரிலிட்டு கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
* ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, 4 வெங்காயம் இவற்றைச் சேர்த்து அரைத்து ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்து கட்ட நோய் சரியாகும்.
* காக்கா வலிப்பு உள்ளவர்கள் தினசரி ஒரு அவுன்ஸ் வெங்காயச்சாறு சாப்பிட்டு வர வலிப்பு மறையும். தினமும் 3 வெங்காயம் சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் உதிரச்சிக்கல் நீங்கும்.
* வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட மலச்சிக்கல் குறையும்.
* வெங்காயத்தை அரைத்து முன்நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.

வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்தும். ஜீரணத்திற்கு உதவுகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கும். இழந்த சக்தியை மீட்கும். தொண்டை கர
கரப்பு நீங்கி குரல் வளமாகும். கொழுப்பை உடனே கரைக்கும். உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.

– அபர்ணா சுப்ரமணியம், சென்னை.

You may also like

Leave a Comment

4 + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi