தண்டையார்பேட்டை: போர் நினைவு சின்னம் பகுதியிலிருந்து பாரிமுனையை நோக்கி நேற்று முன்தினம் இரவு அதிவேகத்தில் 2 சொகுசு பைக்குகள் ராஜாஜி சாலையில் சென்றன. ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் சென்றபோது 2 பைக்குகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் ஒரு பைக்கில் இருந்த 2 வாலிபர்கள், சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்தனர். இதில், பலத்த காயமடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயமடைந்து இருவரும் இறந்துள்ளனர். இதில் மற்றொரு பைக்கில் வந்தவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த பூக்கடை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கொருக்குப்பேட்டை காமராஜர் நகரை சேர்ந்த அபிஷேக் (18) மற்றும் விவேக் (19) ஆகியோர் விபத்தில் இறந்தது தெரிய வந்தது. இதில் விவேக் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிகாம் படித்து வந்தார். அபிஷேக் மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். லேசான காயமடைந்த எர்ணாவூர் ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்த ரமேஷ் (24) என்பவர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.