லக்னோ: பிஎஸ்பி கட்சி தலைவர் மாயாவதி தனது தம்பி மகனை அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தல் குறித்து விவாதிக்க பகுஜன் சமாஜ் கட்சி(பிஎஸ்பி) தலைவர்கள் கூட்டம் லக்னோவில் நேற்று நடந்தது. நாடு முழுவதும் இருந்து வந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், கலந்து கொண்ட மாயாவதி அவரது தம்பி ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த்தை அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார். மாயாவதி தொடர்ந்து பேசும்போது, வரும் மக்களவை தேர்தலுக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும். ஏழைகள்,பிற்படுத்தப்பட்டோர்,சமூகத்தில் பின்தங்கியோருக்கு அதிகாரம் வழங்கும் விதமாக அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.நடந்து முடிந்த ராஜஸ்தான்,சட்டீஸ்கர்,மபி,தெலங்கானா பேரவை தேர்தலில் பல முனை போட்டி நிலவியது. ஆனால் தேர்தல் முடிவுகள் ஒரு சார்பாக அமைந்தது பற்றி விவாதம் நடத்த வேண்டும். அரசுக்கு எதிரான அலை இருந்த போதிலும் மக்கள் எதிர்பார்ப்பின் அடிப்படையில் முடிவுகள் அமையவில்லை என்றார்
இதுகுறித்து ஷாஜகான்பூர் மாவட்ட பிஎஸ்பி தலைவர் உதய்வீர் சிங்,‘‘ ஆகாஷ் ஆனந்தை தன்னுடய அரசியல் வாரிசு என மாயாவதி குறிப்பிட்டார். உபி மற்றும் உத்தரகாண்டை தவிர கட்சி பலவீனமாக உள்ள மாநிலங்களில் கட்சி அமைப்பபை வலுப்படுத்துவதற்கான பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். ஆகாஷ் ஆனந்த் தற்போது கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.