சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்று. சிவன் வேறு விஷ்ணு வேறு என பிளவுபடுத்தாமல் அரியும் சிவனும் ஒன்று என உணர்த்திய தலமாக விளங்கும் இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்தாண்டு ஆடித்தபசு திருநாள் கடந்த ஜூலை 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 10 நாட்களாக கோமதி அம்மன் தவக்கோலத்தில் தினமும் சிறப்பு அலங்காரங்கள் மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 9ம் திருநாளான கடந்த சனிக்கிழமை கோமதி அம்பாள் தேரோட்டம் நடந்தது.
சிகர நிகழ்ச்சியான சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கும் வைபவம் நேற்று நடந்தது. மதியம் 1.30 மணிக்கு கோமதி அம்பாள் தங்கசப்பரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு ரதவீதியில் உள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5.30 மணிக்கு மேல் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாலை 7.29 மணிக்கு தபசு மண்டபத்தில் தவமிருக்கும் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் முதல் காட்சி நடந்தது. தொடர்ந்து கோமதி அம்பாள், சிவலிங்கமாக காட்சி தர வேண்டும் என தபசுமண்டபத்தில் மீண்டும் எழுந்தருளினார். இதைதொடர்ந்து நள்ளிரவு 12.05 மணிக்கு சுவாமி சங்கரலிங்கமாக யானை வாகனத்தில் வந்து கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் சுவாமி, அம்பாளை கோயிலுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.