கார்ட்டூம் :சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட அதிகாரப்போட்டி உள்நாட்டு போராக வெடித்துள்ளது. கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கிய தாக்குதலில் இதுவரை 500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து சூடான் நாட்டிலுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை ‘ஆபரேஷன் காவிரி‘ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. இந்திய கடற்படையின் போர்க்கப்பல் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.தற்போது வரை சுமார் 3,000 இந்தியர்கள் தாயகத்திற்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டு இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எங்கு பார்த்தாலும் துப்பாக்கிச் சத்தம் கேட்கும் சூடானில் உள்ள இந்திய தூதரகத்தை இடமாற்றம் செய்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது. சூடானில் வெடித்துள்ள உள்நாட்டு போரால் தலைநகர் கார்ட்டூமில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக இந்திய தூதரகத்தை கார்ட்டூமில் இருந்து போர்ட் சூடானுக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய முடிவு செய்து இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. போரின் தாக்கம் குறைந்த பிறகு மறு அறிவிப்பு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தூதரகத்தை +249 999163790; +249 119592986; +249 915028256 ஆகிய எண்களிலோ cons1.khartoum@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.