டெல்லி: குஜராத்தில் தோல்வியுற்ற திட்டத்துக்கு செலவிட்ட மக்கள் வரிப்பணம் ரூ.13.5 கோடி வீணானதற்கு யார் பொறுப்பு? என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார். அபரிமிதமான செயல்பாட்டு செலவுகள் காரணமாக 13 கோடி ரூபாய் செலவழித்து நாட்டின் முதல் கடல் விமான சேவை என்று அழைக்கப்படும் சேவையை திட்டத்தை குஜராத் அரசு அறிமுகப்படுத்தியது.
பாஜக எம்எல்ஏ ஹர்ஷத் படேல், ஒரு வாரத்திற்கு முன்பு சட்டசபையில் கடல் விமான சேவை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பதில் அளித்த நிர்வாகம், கடல் விமானத்தை ஏவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும் இந்த நடைமுறை முடிந்ததும், சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த 17 தேதி மாநில சட்டசபையில் காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா கடல் விமான சேவை குறித்து கேள்வி எழுப்பினார்.
அவரின் கேள்விக்கு பதிலளித்த குஜராத் அரசு , அகமதாபாத்தில் இருந்து கெவாடியாவுக்கு 2020ல் ரூ 13,15,06,737 செலவில் கடல் விமான சேவை தொடங்கப்பட்டது. நிதி காரணங்களுக்காகவும், ஆபரேட்டருக்கு அதிக செலவு காரணமாகவும் கடல் விமான சேவை 2021 இல் நிறுத்தப்பட்டது என்றும் அரசாங்கம் கூறியது. வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் இயக்கம் மற்றும் பராமரிப்பை கடினமாக்கியதால் சேவை நிறுத்தப்பட்டதாக அரசாங்கம் சபையில் ஒப்புக்கொண்டது.
இது தொடர்பாக சசிதரூர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, குஜராத்தில் தோல்வியுற்ற திட்டத்துக்கு செலவிட்ட மக்கள் வரிப்பணம் ரூ.13.5 கோடி வீணானதற்கு யார் பொறுப்பு? என கேள்வி எழுப்பினார். சபர்மதி ஆற்றில் இருந்து படேல் சிலை வரை நீர் வழி விமான சேவை திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியது. அதிக செலவு காரணமாக நீர்வழி விமான சேவை திட்டத்தை குஜராத் அரசு கைவிட்டுவிட்டது. சரியான திட்டமிடல், சாத்தியக்கூறுகளை ஆராயாமல் வெறும் வாக்கு வங்கியை குறிவைத்து புகைப்படம் எடுப்பதற்காக திட்டம் தொடங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். வாக்கு வங்கிக்காக, திட்டத்தை செயல்படுத்தியவர்களே ரூ.13.5 கோடி வீணானதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.