குஜராத்: பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் 7 ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்கு எதிராக 9,000-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் பட்டியலின சகோதரர்கள் இருவர் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த நபர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக அந்த மாநிலம் முழுவதும் பட்டியலின மக்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் அதிர்ச்சி அளிக்கும் தரவுகள் இடம் பெற்றுள்ளன.
2015-ம் ஆண்டு குஜராத்தில் மட்டும் பட்டியலின மக்களுக்கு எதிராக நடந்த 1046 குற்றங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 10 வழக்கில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு 1322 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 22 மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளன. 2017-மாண்டு 1477 வழக்குகள், 2018-ம் ஆண்டு 1426 வழக்குகள், 2019-ம் ஆண்டு 1416 வழக்குகள் பதிவாகி உள்ளன. கொரோனா ஊரடங்கு காலங்களாக 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளின் முறையே 1326 மற்றும் 1207 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
7 ஆண்டுகளில் மொத்தம் 185 கொலை முயற்சி வழக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக கடந்த 2015 முதல் 2021 வரையிலான 7 ஆண்டுகளில் பட்டியலின பெண்கள் மீதான குற்றங்களின் எண்ணிக்கை குஜராத்தில் அதிகரித்து வருகிறது. 675 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. பட்டியலின மக்கள் மீதான குற்றங்கள் தங்கள் ஆட்சியில் குறைந்து விட்டதாக பாஜக கூறி வருகிறது. ஆனால், ஒன்றிய அரசு அளித்த அறிக்கையே பாஜக கூறுவது பொய்யான தகவல் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.