மதுரை சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று ஆணையூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
மதுரையை பெரிய நகரமாக மாற்றிய பெருமை கலைஞரையே சேரும். மதுரையை மாநகராட்சியாக்கினார். உயர் நீதிமன்ற கிளையை கொண்டு வந்தார். மதுரையை பாலங்களுடன் நவீன நகரமயமாக்கினார். அவரைப் போல கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்தார். இதனால்தான் மதுரையையும் திமுகவையும், கலைஞரையும் பிரிக்க முடியாது என்றேன். ஜல்லிக்கட்டின் தலைநகரம் அலங்காநல்லூர். இதை அகில உலக ஜல்லிக்கட்டு என்றால் மிகையாகாது. ஏனெனில் ஜல்லிக்கட்டை உலகமே விரைவில் விளையாடும்.
தமிழ்நாட்டை உலக அளவில் விளையாட்டிற்கு தலைநகராக்க உதயநிதி முயற்சிக்கிறார். அது நடந்தே தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. நல்லவர்கள் கையில் ஆட்சி கிடைத்தால் என்ன ஆகும்? அதற்கு இந்த மாதிரி ஆட்கள் கையில் அதிகாரத்தை கொடுக்க வேண்டும். கல்வி தான் நம் பலம். நம்மை பிரிக்க பல சக்திகள் உள்ளன. மதுரை மக்களை பார்த்து தான் காந்தியார் தனது சட்டையை துறந்தார். இங்கே நாம் செய்யும் நன்மை நாடெங்கும் பரவ வேண்டும். வேலை செல்லும் பெண்கள் அதிகம் தமிழ்நாட்டில் தான் உள்ளனர்.
இது எப்படி சாத்தியம். நல்ல அரசியல் நடந்தால் தான் இது சாத்தியம். குஜராத், ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்க முடிந்த உங்களுக்கு ஏன் என் இங்கே செய்ய முடியவில்லை. இதற்காக அமைச்சர் உதயநிதி எடுத்து ஒற்றை செங்கல்லால் கட்டாத கட்டிடமும், அதிகாரத்தின் அஸ்திவாரமும் ஆடியது. தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என அண்ணா கூறியது இன்னும் இருக்கிறது. எனவே, நல்லதைத் தொடர வாய்ப்பு கொடுத்தே ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.