சென்னை: சென்னை கிண்டி கத்திப்பாரா பாலத்தின் கீழ் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது. மேற்குத்திசை காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையில் பல்வேறு இடங்களில் விடிய விடிய இடி மற்றும் மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. குறிப்பாக கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கோடம்பாக்கம், அம்பத்தூர், போரூர், ஆவடி, பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை அதிகளவில் பெய்தது.
ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திற்கு கீழ் இருக்கக்கூடிய சாலை மற்றும் புறநகர் பகுதிகளை ஆய்வு செய்தார். அந்த பகுதியில் மழை நீர் தேங்கி இருந்ததால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.