கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அங்காளம்மன் பூங்காவனத்தம்மன் தேர்பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு கோவிலை வலம் வந்தனர். மேலும் அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. இந்த அங்காளம்மன் தேர்பவனியைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இந்த பக்தர்கள் இன்று காலை முதல் தேர் பவணியை காண குவிந்திருந்த பொழுது அவர்கள் ஆங்காங்கே உணவு அருந்திய பேப்பர் தட்டுகளையும், வாட்டர் பாட்டில்களையும், குப்பைகளாக வீசி சென்றனர். இந்த நிலையில் அங்காளம்மன் பண்டிகை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவேரிப்பட்டினம் காவல் நிலைய காவலர் சிவன் தான் பாதுகாப்பு பணியில் நின்ற இடத்தில் பக்தர்கள் வீசிச் சென்ற குப்பைகளை சுத்தம் செய்தார். தனிநபராக குப்பைகளை காவலர் சுத்தம் செய்து கொண்டிருப்பதை கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் அந்த காட்சியை தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.