புதுடெல்லி: ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவர், உறுப்பினர்களின் வயது வரம்பை உயர்த்தும் மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மறைமுக வரிகள் தொடர்பான வழக்குகளில் 10 ஆண்டுகள் வரையிலும் அனுபவமிக்க வழக்கறிஞர்கள் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். தலைவர், உறுப்பினர்களின் வயது வரம்பை உயர்த்தும் மசோதாவை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். அதில் ஜிஎஸ்டிஏடி-யின் தலைவர் பதவியை 67லிருந்து 70 ஆகவும், உறுப்பினர்களின் வயதை 65லிருந்து 67 ஆகவும் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஐம்பது வயதை பூர்த்தி செய்யாத யாரும் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவராகவோ அல்லது உறுப்பினராகவோ நியமிக்க தகுதி உடையவர் அல்ல. தலைவர் 70 வயது வரையும், நீதித்துறை உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர்கள் 67 வயது வரையோ பதவியில் இருக்கலாம் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
* பட்ஜெட் வரிவிதிப்பு இனி உடனடி அமல்
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரிகளின் தற்காலிக வசூல் சட்டம் 1931க்கு பதிலாக வரிகளின் தற்காலிக வசூல் சட்டம் 2023ஐ மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். அதில் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் சுங்கம் மற்றும் கலால் வரி மாற்றங்களுக்கு உடனடியாக அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் அறிவிப்பின் போது பிப்ரவரி 1ம் தேதி அறிவிக்கப்படும் இந்த வரி மாற்றங்கள் வழக்கமாக ஏப்ரல் 1ம் தேதி அல்லது குறிப்பிட்டுள்ள தேதி நள்ளிரவில் இருந்து அமலுக்கு வருகிறது. இந்நிலையில் இனிமேல் வரி தொடர்பான அறிவிப்புகளை உடனடியாக அமல்படுத்தப்படும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.