சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: டிஎன்பிஎஸ்சி பணிகளில் 10000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வுகள் நடந்து முடிவுகள் வெளியாகி, சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்துள்ளது. பணியிடத் தேர்வு நடைபெறாத ஆண்டுகளை கணக்கிட்டு 30000 பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற வேண்டிய நிலையில், வெறும் 10000 பணியிட தேர்வுகள் மட்டும் நடத்தியிருப்பது ஏற்புடையதல்ல. மக்களுக்கான அரசின் சேவைகள் தங்கு தடையின்றி தொடர அரசுப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவை நிறைவேற்ற வேண்டும். ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக 30000 காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.