சென்னை: குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். அரசு துறைகளில் 6,244 காலியிடங்களை நிரப்புவதற்கான, குரூப் – 4 தேர்வுக்கு, நாளையுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது. இந்நிலையில், அவகாசத்தை நீட்டிக்குமாறு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு துறைகளில், வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட, 16 வகை, குரூப் – 4 பதவிகளில் 6,244 காலியிடங்களை நிரப்ப வரும் ஜூன் 9ல் தேர்வு நடக்க உள்ளது.
இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜனவரி 30ல் துவங்கியது. பதிவுக்கான அவகாசம், நாளையுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், விண்ணப்ப பதிவுக்கு, இன்னும் கூடுதல் நாட்கள் அவகாசம் வழங்குமாறு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வு குறித்த கூடுதல் விபரங்களை, தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. யின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பங்களை திருத்துவதற்கு மார்ச் 4 முதல் மார்ச் 6 வரை 3 நாட்கள் அவகாசம் உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.