சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் பின்வருமாறு: வாணியம்பாடி எம்.எல்.ஏ செந்தில்குமார்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வாரிய உறுப்பினர்கள் 13 பேர் இருக்க வேண்டும். ஆனால், 3 பேர் தான் உள்ளனர். அதன் தலைவரும் தற்காலிகமாகத்தான் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 உள்ள டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்த வேண்டும். அதேபோல, ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையம் சென்னையில் மட்டும்தான் உள்ளது. திருச்சி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அமைக்க வேண்டும்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: குரூப்-4 தேர்வு குறித்து உறுப்பினர் பேசினார். தற்போது கவுன்சிலிங் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். அதேபோல ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி மதுரை, கோவை, சென்னையில் அரசு சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது.
வாணியம்பாடி எம்.எல்.ஏ செந்தில்குமார்: இப்போதைய ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டதாக சொல்கிறீர்கள். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 2018-2019ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டது.
நிதியமைச்சர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: உறுப்பினர் சொல்வது தவறு. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 7 ஆண்டுகளில், ஒரு ஆண்டிலாவது வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டதாக சொல்லட்டும். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 2011-12ம் ஆண்டு ரூ.1,364 கோடியும், 2012-13ம் ஆண்டு ரூ.1,760 கோடியும் வருவாய் உபரியாக இருந்தது. ஆனால், அதன்பிறகு 2013-14ம் ஆண்டு ரூ.1,789 கோடியும், 2014-15ம் ஆண்டு ரூ.6,400 கோடியும், 2015-16ம் ஆண்டு ரூ.11,985 கோடியும், 2016-17ம் ஆண்டு ரூ.12,964 கோடியும், 2017-18ம் ஆண்டு ரூ.21,594 கோடியும், 2018-19ம் ஆண்டு ரூ.23,459 கோடியும், 2019-20ம் ஆண்டு ரூ.35,909 கோடியும், 2020-21ம் ஆண்டு ரூ.61,320 கோடியும் வருவாய் பற்றாக்குறை அதிகரித்து வந்துள்ளது.