புதுடெல்லி: அரசை கேள்வி கேட்பதற்கும், அதற்காக சிறை செல்லவோ பயப்படமாட்டேன் என்று மாநிலங்களவை எம்பியாக பதவியேற்ற ஸ்வாதி கூறினார். டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், முதல்முறையாக ஆம்ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார். டெல்லி மதுபான ஊழல் தொடர்பாக சிறையில் இருக்கும் சஞ்சய் சிங் மற்றும் என்.டி.குப்தா ஆகியோர் இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர்களாக தொடர்வதற்கு, கட்சியின் அரசியல் விவகாரக் குழு முடிவெடுத்தது.
அதன்படி மூவரும் போட்டியின்றி எம்பியாக தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 2015ம் ஆண்டு டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ஸ்வாதி மாலிவால், டெல்லியில் ஆசிட் தாக்குதல், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் பெண்கள் பாதுகாப்புக்காகவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று ஸ்வாதி மாலிவால், மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக அவர் டெல்லியில் உள்ள கனாட் பிளேஸில் உள்ள ஹனுமன் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘அரசை எதிர்த்து கேள்வி கேட்பதற்கும், அதற்காக சிறை செல்லவோ பயப்படமாட்டேன்’ என்று கூறினார்.